Pages

Powered by Blogger.

Feb 11, 2014

அன்புள்ள மனைவிக்கு - படித்ததில் பிடித்த ஒரு கவிதை


இது சில வருடங்களுக்கு முன் குமுதத்தில் வந்த கவிதை. வாசிக்க மிகப் பிடித்ததால் பத்திரப் படுத்தினேன். ஆனால் எழுதியவர் பெயர் தெரியவில்லை. உங்களில் யாராவதாகக் கூட இருக்கலாம்.

அன்புள்ள மனைவிக்கு

ஆண்டுகள் போனாலென்ன
வாண்டுகள் ஆனாலென்ன

முடியாது காதல் ஓட்டம்
விடியாது இரவின் நீட்டம்

வாழ்க்கையில் யுத்தம் உண்டு
முடிந்தபின் முத்தம் உண்டு

முத்தங்கள் அலுக்கும் போது - மீண்டும்
யுத்தத்தின் சத்தம் உண்டு

சண்டைகள் இல்லாக் காதல்
சவ சவ காதல் - நெஞ்சில்
எரிச்சலை வைத்துக் கொண்டு
சிரிப்பது போலிக் காதல்

கோபமோ பொங்கி நிற்கும்
தாபமோ ஒளித்தல் இன்றி

வெளிப்படும் உணர்வே காதல் - அங்கே
சண்டையும் காதல் ஆகும்

வாழ்க்கையே போதும் என்று
வெறுக்கின்ற நேரம் உண்டு
வெறுப்பினைத் தூண்டும் நீதான்
வாழவும் தூண்டுகிறாய்.

வாழ்க்கையில் வரமாய் வந்தாய்
சில நேரம் சாபம் தந்தாய்
வரத்தினை நினைத்துக் கொண்டு
சாபத்தை மறக்கக் கற்றேன்

கூட்டலும் உண்டு; வாழ்வில்
கழித்தலும் உண்டு; கூட்டிக்
கழிக்கின்ற போது கொஞ்சம்
மிச்சமாய் இன்பம் உண்டு

நிம்மதி தேடும் நெஞ்சம்

தவிப்பினில் நீச்சல் போடும்
நித்திரை இல்லாத கண்கள்
ஓ வென்று கூச்சல் போடும்

அனைத்தையும் வெல்வதற்கு உன்
அருகாமை ஒன்று போதும்; உன்
சேலையின் முனையில் வாழ்வின்
சோர்வினைப் போக்கிக் கொள்வேன்

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.